உள்ளம் எனும் காட்டினிலே உள்ளது என்ன...-அதன்
உள்நுழைந்து தேடியும் நான் கண்டது என்ன
கொள்ளை அழகே மனமே என்று வியந்தேன்-பின்
இல்லை அது முட்பாதை என்று பயந்தேன்.
நதிமீதில் பூப்போல மிதக்கும் ஒருநாள்
நாணல்போல் தலைசாய்த்துக் கிடக்கும் மறுநாள்
இதுபோதும் இதுபோதும் எனக் கூத்தாடும்-பின்
ஏனிந்த வாழ்வென்று தன்னைச் சாடும்....!
அன்பொன்றே உலகாளும் என்றே பாடும்
அரிதார முகம் என்று கதவை மூடும்
உறவென்று கைநீட்டி ஓடிப்போகும்-பொய்
உலகென்று தனிமைக்குள் வாடிச்சாகும்...!
தேடல்கள் முடியாது என்றே தெரியும்
தேடுவதை நிறுத்திவிட யாரால் முடியும்
கானல் நீர் மான்வேட்கை போல வாழ்க்கை-இது
புரிந்தாலும் அணையாது உயிர்மேல் ஆசை...!
Tuesday, January 30, 2007
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
அன்பே!
துயரலைக்கும் விழிகளுடன் கையசைத்தாய்
உலர்ந்த கன்னங்களில் உருளும் கண்ணீருக்கு
வெட்கியபடி சொன்னது நினைவிருக்கிறது
'இந்த மரங்கள் இன்றைக்கும் அழகாயிருக்கின்றன'
தோழி!பிரியும் கணத்தின்
பொருளற்ற வார்த்தைகள்
நீ பேசியிருக்க வேண்டியதில்லையடி!
தேசத்தில் இருப்பழிந்து
எங்கோ இடைநடுவில்
முகவர்களின் வாக்குறுதிகளில்
எப்போதாவது உயிர்ப்பவளே!
நீ பேசியிருக்க வேண்டியதில்லை.
மொழியறியா நாடொன்றின்
விமானநிலையத்தில்
உனது நம்பிக்கைகள் தகர்ந்ததை
நேற்று தொலைபேசி சொன்னது.
'எங்களுக்கேன் இந்த நிலை?'என்றழுத
உந்தன் குரல்
இங்கொலித்துத் தேய்ந்தது.
சிறைகள்தான் வேறு
அன்பே!சிலுவைகள் ஒன்றுதான்!
இருந்திருக்கலாம் இங்கேயே...
குண்டுவீச்சு விமானங்கள்
வராத பொழுதுகளில்
பல்வேறு உருக்காட்டும் நீலவானம்
முற்றம் வந்திறங்கி
சின்ன அலகாலே சிறகுகோதும் சிட்டுக்குருவி
சம்பலும் மரவள்ளிக்கிழங்கும் என
சாவின் வலியும் வாழ்வின் சுவையும்
கூடிய ஊரொன்றில் வாழ்ந்திருக்கலாம்.
இல்லையெனில்...
சூழ்ந்தழச் சுற்றமில்லாமல் செத்திருக்கலாம்.
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
உனது அறையைவிடச் சற்றே விசாலமான
குளிர்ச்சிறையொன்றில் இருந்து சொல்கிறேன்
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை.
துயரலைக்கும் விழிகளுடன் கையசைத்தாய்
உலர்ந்த கன்னங்களில் உருளும் கண்ணீருக்கு
வெட்கியபடி சொன்னது நினைவிருக்கிறது
'இந்த மரங்கள் இன்றைக்கும் அழகாயிருக்கின்றன'
தோழி!பிரியும் கணத்தின்
பொருளற்ற வார்த்தைகள்
நீ பேசியிருக்க வேண்டியதில்லையடி!
தேசத்தில் இருப்பழிந்து
எங்கோ இடைநடுவில்
முகவர்களின் வாக்குறுதிகளில்
எப்போதாவது உயிர்ப்பவளே!
நீ பேசியிருக்க வேண்டியதில்லை.
மொழியறியா நாடொன்றின்
விமானநிலையத்தில்
உனது நம்பிக்கைகள் தகர்ந்ததை
நேற்று தொலைபேசி சொன்னது.
'எங்களுக்கேன் இந்த நிலை?'என்றழுத
உந்தன் குரல்
இங்கொலித்துத் தேய்ந்தது.
சிறைகள்தான் வேறு
அன்பே!சிலுவைகள் ஒன்றுதான்!
இருந்திருக்கலாம் இங்கேயே...
குண்டுவீச்சு விமானங்கள்
வராத பொழுதுகளில்
பல்வேறு உருக்காட்டும் நீலவானம்
முற்றம் வந்திறங்கி
சின்ன அலகாலே சிறகுகோதும் சிட்டுக்குருவி
சம்பலும் மரவள்ளிக்கிழங்கும் என
சாவின் வலியும் வாழ்வின் சுவையும்
கூடிய ஊரொன்றில் வாழ்ந்திருக்கலாம்.
இல்லையெனில்...
சூழ்ந்தழச் சுற்றமில்லாமல் செத்திருக்கலாம்.
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை
உனது அறையைவிடச் சற்றே விசாலமான
குளிர்ச்சிறையொன்றில் இருந்து சொல்கிறேன்
இங்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை.
Monday, January 29, 2007
ஒலியின் இருப்பு
இப்போதுதான் தெரிகிறது
உயிர்வாழ்ந்து கொண்டிருந்ததே
ஒலியினால்தான் என்று.
பேச்சுக்குரல்களும்
பாடல்களுமற்ற
மெளனம் எனக்குப் பழக்கமில்லை.
நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைபோல
ஒலியற்ற தளத்தின்மேல்
விழுந்து எழுகிறேன்.
ஒலி என்பதே பார்வையாய் இருந்ததோ...
சுற்றிலும் கவிகிறது அந்தகாரம்.
பழகத்தான் வேண்டும்
பொம்மைகளைக் கையுதறிப் பிரிந்ததுபோல்
நெருக்கமானவர்கள் மரணவெளியுள்
இறங்கி மறையப் பார்த்திருந்ததுபோல்
மனிதர்களை நேசிப்பதை நிறுத்தியபிறகும்
உதட்டில் புன்னகையை
ஒட்டவைத்துக்கொண்டிருப்பதுபோல்
மெளனத்தையும் பழக்கப்படுத்தி விடலாம்.
ஆயினும்
மனதிற்குள் அதிரும் குரல்களையும்
என்னோடு நான் பேசுதலையும்
நிறுத்தும்வரை
அதன் பெயர்
மெளனமல்ல
பேசாதிருத்தல்.
உயிர்வாழ்ந்து கொண்டிருந்ததே
ஒலியினால்தான் என்று.
பேச்சுக்குரல்களும்
பாடல்களுமற்ற
மெளனம் எனக்குப் பழக்கமில்லை.
நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைபோல
ஒலியற்ற தளத்தின்மேல்
விழுந்து எழுகிறேன்.
ஒலி என்பதே பார்வையாய் இருந்ததோ...
சுற்றிலும் கவிகிறது அந்தகாரம்.
பழகத்தான் வேண்டும்
பொம்மைகளைக் கையுதறிப் பிரிந்ததுபோல்
நெருக்கமானவர்கள் மரணவெளியுள்
இறங்கி மறையப் பார்த்திருந்ததுபோல்
மனிதர்களை நேசிப்பதை நிறுத்தியபிறகும்
உதட்டில் புன்னகையை
ஒட்டவைத்துக்கொண்டிருப்பதுபோல்
மெளனத்தையும் பழக்கப்படுத்தி விடலாம்.
ஆயினும்
மனதிற்குள் அதிரும் குரல்களையும்
என்னோடு நான் பேசுதலையும்
நிறுத்தும்வரை
அதன் பெயர்
மெளனமல்ல
பேசாதிருத்தல்.
Subscribe to:
Posts (Atom)